தொடரும் நண்பர்கள்

சனி, 17 ஜூன், 2017

சுட்டபழம் வேண்டுமா, சுடாதபழம் வேண்டுமா



இந்த வாரத்து விருந்தினர் கந்தசாமி. நமது சீயான் விக்ரம் நடித்த கந்தசாமி இல்லை, கிட்டத்தட்ட 270 ஆண்டுகள் பழமை வாய்ந்த கந்தசாமியை பார்ப்போம் வாருங்கள்.


கந்தசாமி வேறு யாரும் இல்லை , இலங்கையின் பூர்வகுடி தமிழர்களின் கோட்டையாக திகழ்ந்த யாழ்ப்பாணத்திலிருந்து பருத்தித்துறை செல்லும் பாதையில் 11/2 கி.மீ. தூரத்தில் நல்லூர் கந்தசாமி கோவில் அமைந்துள்ளது. பல்வேறு சிறப்புகளை பெற்ற இந்த கோவிலை பற்றியும், இதன் வரலாறு மற்றும் கந்தசாமியாக வீற்று இருக்கும், சுட்டபழம் வேண்டுமா சுடாதபழம் வேண்டுமா என்று, அன்றே சிலேடை பேசிய எம்பெருமான் முருகபெருமானின் சிறப்புக்களை பார்ப்போம் வாருங்கள்.

சிலேடை பேசிய எம்பெருமான்

பத்து வருடங்களுக்கு முன் அந்த கோவிலுக்குள் வெளிஆட்கள் யாரும் அவ்வளவு சீக்கிரம் போய்விட முடியாது. ராணுவ முகாம்கள், ராணுவ சோதனை சாவடிகள், ஊர்காவல் படையின் கண்காணிப்பு போன்றவற்றை தாண்டி நீங்கள் கந்தசாமியை தரிசிக்கவேண்டும். இரண்டு நாட்டு விசா வேண்டும், இருவராலும் சந்தேக கண்கொண்டு கசக்கி பிழியபடுவீர்கள், கிட்டத்தட்ட அமெரிக்க ஜனாதிபதியை சந்திக்க நீங்கள் எடுக்கவேண்டிய அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்கவேண்டும். இன்றைக்கு நிலைமை வேறு (இலங்கை ராணுவத்தால் விடுதலை புலிகள் தோற்கடிக்க பட்ட பிறகு வேறு ராணுவம், வேறு காவலர்கள் இருக்கிறார்கள்).

இவர் இருக்கும் இடம் நமக்கு மிகவும் பரிட்சயமான இடம் தான். தமிழக இளைஞர்களுக்கு அதுவும் 1987 களில் மாணவ பருவத்தை எட்டியவர்கள் அனைவரும் இந்த இடத்தை மறந்திருக்க முடியாது. சுற்றி வளைக்காமல் சொல்கிறேன். திலிபன் எனும் பெயரில் அழைக்கப்பட்ட பார்த்திபன் இராசையா என்கிற யாழ்ப்பாணத்தை பிறப்பிடமாக கொண்ட 24 வயது இளைஞரை ஞாபகம் இருக்கிறதா? விடுதலை புலிகளின் அமைப்பில் அந்நாட்களில் லெப்டினன் கேணல் என்கிற பட்டம் வழங்கப்பட்டு, யாழ்ப்பாணத்தின் அரசியல் துறை பொறுப்பாளராக இருந்தவர் தான் இந்த திலிபன். இவருக்கும் இந்த கோவிலுக்கும் என்ன சம்மந்தம் என்கிறீர்களா?



இந்திய அமைதிப் படையினரிடம் ஐந்து கோரிக்கைகளை முன் வைத்து நிறைவேற்ற கேட்டார். அவை இந்திய அமைதிபடையால் நிராகரிக்கப்பட்டது. ஏற்கனவே அறிவித்தபடி காந்திய வழியில் 12 நாட்கள் தண்ணீர் கூட அருந்தாமல் உண்ணாவிரதம் இருந்து உயிர் துறந்தார்.அப்படி அவர் உண்ணாவிரதம் இருந்த இடம் தான் நல்லூர் கந்தசாமி கோவில் வளாகம். அந்த நாட்களில் எல்லோராலும் கூர்ந்து கவனிக்கபட்ட இடம் இந்த கோவில்.

வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த கந்தசாமி கோயில் 948 கி.பி இல் கட்டப்பட்டு, வெளிநாட்டவர்கள் படையெடுப்பு காரணமாக பலமுறை இடிக்கப்பட்டு, நல்லூர் பிரதேசத்திற்குள் பல்வேறு இடங்களில் பல முறை இடம் பெயர்ந்து உள்ளது. இந்த கோவில் முதன்முதலில் கட்டப்பட்ட வருடம் பற்றிய சரியான வரலாற்று பதிவுகள் இல்லை. (வரலாறு முக்கியம் என்று பள்ளியில் ஆசிரியர் சொன்னபோதும் சரி, திரைபடத்தில் வடிவேலு சொன்னபோதும் சரி, சிரித்துவிட்டு அதை மறந்துவிட்டோம்).



தற்போதைய கோவில்

கடைசியாக போர்த்துகீசிய ஜெனரல் பிலிப் டி ஒலிவேர் 1610 ஆம் ஆண்டு வரலாற்று புகழ் மிக்க கந்தசாமி கோவிலை இடித்துத் தள்ளினார், கிட்டத்தட்ட இதே ஆண்டுகளில் (1964 - 1966) திருச்செந்தூர் முருகன் கோவிலும் டச்சு காரர்களின் ஆக்கிரமிப்பிற்கு ஆளாகி இருந்தது. இரண்டு வருடங்கள் இந்த ஆக்கிரமிப்பு திருச்செந்தூரில் இருந்திருக்கிறது, மக்களின் தொடர் போராட்டங்கலாலும், மதுரை நாயக்கர் உத்தரவின் பேரிலும் கோவிலில் இருந்து டச்சு காரர்கள் வெளியேறினார்கள். (அவர்கள் வழக்கப்படி விலை மதிக்க முடியாத, சிலைகளையும், ஆபரணங்களையும் எடுத்து சென்றார்கள் என்பதை சொல்ல தேவை இல்லை) முருகனுக்கு வந்த சோதனையில் என்ன ஒற்றுமை பாருங்கள்.


அதற்கு பிறகு தற்போதைய கோவில் 1749 ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் காலனித்துவ சகாப்தத்தில் கிருஷ்ணசுப ஐயர் மற்றும் ரகுநாத மாப்பன முதலியார் ஆகியோரால் 'குருக்குல் வால்வு' என்ற மூலக் கோவில், இவ் வளாகத்தில் கட்டப்பட்டது. அவ்வப்போது மேம்பாட்டு நடவடிக்கைகள் நடை பெற்றாலும், (1899 மற்றும் 1902 வருடங்களில் குறிப்பிட தகுந்த கட்டிட பணிகள் நடந்துள்ளன) 1964 ஆம் ஆண்டில் 'வசந்த மண்டபம்' மிகுந்த பொருள் செலவிலே கட்டப்பட்டது.



இந்த கோவிலின் முக்கிய நுழைவு வாயில் கிழக்கு நோக்கி அமைந்துள்ளது. கட்டிடக்கலையை பொறுத்தவரை அனைத்தும் திராவிட கோவில்களை ஒத்து இருக்க கூடிய அமைப்புதான். ஆலயத்தின் தெற்கு புறத்தில் தெப்ப குளம் (தீர்த்த கேணி) அமைந்துள்ளது. அந்த குளத்தின் அமைப்புகூட நமது திராவிட கோவில்களை ஒத்ததாக இருகின்றது.


முருகனின் மற்றொரு பெயரான தண்டாயுதபாணிக்கு அக்குளத்தை ஒட்டி சிறு கோவிலும் அமைக்கப்பட்டுள்ளது. ஆலயத்தின் நான்கு பக்கங்களில் மடாலயங்களும் அமைந்துள்ளன.

இந்த கோவிலின் எழில் மிகு தோற்றம் இங்கு வந்து செல்வோரின் மனதை கொள்ளை கொள்கிறது.



எழில் மிகு தோற்றம்

ஒருவேளை இலங்கையில் யாழ்ப்பாணத்தில் எரிக்கபட்ட நூல் நிலையம் இருந்திருந்தால் , இந்த கோவிலை பற்றிய ஏதாவது வரலாற்று சான்று இருந்திருக்கும். 1933 -களில் துவங்கப்பட்ட இந்த நூலகம் எரிக்கப்பட்ட போது சுமாராக 97,000 அறிய புத்தகங்களையும், சுவடிகளையும் தன்னகத்தே கொண்டிருந்தது.



யாழ்ப்பாணத்தில் எரிக்கபட்ட நூல் நிலையம் 

இந்த கோவிலின் சிறப்பு மூலஸ்தானத்தில் முருகனுடைய வேல் மட்டுமே இருக்கிறது. மேலும் இங்கு சிறப்பு பூஜை என்று சொல்ல கூடிய நித்ய அக்கினி மற்றும் நித்ய உற்சவம் தினமும் நடைபெறுகிறது. முருகனுக்கு பிடித்த கார்த்திகை நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கிறது.

மூலஸ்தானத்தில் முருகனுடைய வேல்


முருகனின் ஆறுபடை வீடுகளை போல் இலங்கையில் அமைந்துள்ள தொன்மையானதொரு வரலாற்று ஆன்மீக சின்னம் இந்த கோவில். இதை போலவே இலங்கையில் கதிர் காமத்தில் அமைந்துள்ளது  மற்றொரு சிறப்பு மிக்க முருகன் கோவில்.

நல்லூரில் பூசைகளும் மகோற்சவமும்


இவ்வாலயத்தில் நித்திய, நைமித்திய பூசைகள் காலந் தவறாது நடைபெறுகின்றன. ( 5 கால பூசைகள்). மேலும் ஒரு சிறப்பு என்னவென்றால் இந்த கோவிலில் சொல்ல படும் மந்திரங்கள் பிரத்தியேகமாக இந்த கோவிலுக்கு என்று உருவாக்கப்பட்டு பரம்பரை பரம்பரையாக சொல்லப்பட்டு வருகிறது. வேறு ஒரு கோவிலில் இருந்து அர்ச்சகர் இங்கு வந்து அர்ச்சனை செய்துவிட முடியாது.

பூசை

மேலும் இந்த கோவிலின் பேரில் மன்னர்கள், செல்வந்தர்கள் வழங்கிய செல்வம் மிக அதிகம் என்பதால் இங்கு இன்றுவரை அர்ச்சனைக்கான கட்டணமாக இலங்கை ரூபாயில் Rs.1/- மட்டுமே (நமது ரூபாயில் 0.42 பைசாக்கள் மட்டுமே)பெற்று கொள்கிறார்கள். 


இங்கு, ஆவணி அமாவாசையை கணக்காக கொண்டு இருபத்தைந்து நாட்களுக்கு மகோற்சவம் சிறப்பாக நடைபெறுகின்றது.


மகோற்சவ காலங்களில்,முருக பக்தர்கள் காவடி எடுத்தல், தீச்சட்டியெடுத்தல், அங்கப்பிரதட்சணம் செய்தல், அள்ளுகாசும் தென்னம்பிள்ளையும் வழங்கல், பிள்ளை விற்று வாங்கல், மடிப்பிச்சை எடுத்தல், மொட்டையடித்தல், பட்டுச் சார்த்தல், தேவாரம் ஓதுதல், வடம்பிடித்தல் முதலான நேர்த்திக் கடன்களை நிறைவேற்றுவர்.


இக்காலத்தில் சமயப் பிரசங்கம் செய்தல், திருமுறைகள் ஓதுதல், ஓதுவார்களை அழைப்பித்து ஓதுவித்தல் முதலான சமய நிகழ்ச்சிகள் மக்களின் ஆன்மீக மேம்பாட்டிற்காக நடத்தப்படுகின்றன.

இன்றைய நிலையில் தமிழர்களை விட தமிழ் கடவுளான கந்தசாமி சிங்களவர்களுக்கு மிகவும் பிடித்து போய் விட்டார். கோவிலுக்கு போவதென்றால் அவர்கள் மூன்று நாட்கள் அசைவம் தவிர்த்து, சைவம் சாப்பிட்டு விட்டு தான் கோவிலுக்கு போகிறார்கள். கோவிலில் மனம் உருகி வணங்கி செல்வதை சாதரணமாக பார்க்க முடிகிறது.



இந்த கோவிலை பொறுத்தவரை, தமிழ் நாட்டில் முருக கடவுளுக்கு நடைபெறும் அனைத்து பூசைகளும் நடை பெறுகிறது.

எவ்வளவோ தடைகள், சோதனைகள், எதிரிகள் இந்த முருகனை அழிக்க பார்த்தாலும், என்னை அழிக்க முடியது என்பதை போல் வேல் ஒன்றை ஆயுதமாய் வைத்துகொண்டு நல்லோரை நல்லூரில் இருந்து காத்து கொண்டிருக்கிறான்...

தவித்து கொண்டிருக்கும் தமிழினம் இந்த முருகனின் வரலாற்றில் இருந்து ஒன்றை புரிந்து கொள்ள வேண்டும். இந்த கந்தசாமி கடவுள் சாதாரணமானவர் அல்ல, எத்தனை எதிரிகள் வந்தாலும், எத்தனை சோதனைகள் வந்தாலும், எத்தனை முறை அழித்தாலும், மீண்டும் அவர் எழுந்ததுபோல், இந்த தமிழ் இனமும் தமிழ் மொழியும், எத்தனை முறை அழிக்க முயற்சித்தாலும் மீண்டும் உயிர்பெறும் என்பதை புரிந்து கொள்ள வேண்டும்.


வெற்றி வேல் முருகனுக்கு அரோகரா !

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

சுப்புரமணியன் சுவாமியும் சீனாவும் - நீங்க நல்லவரா ? கெட்டவரா?

மதுரை சோழவந்தானை பிறப்பிடமாக கொண்டவர்  சுப்பிரமணியன் சுவாமி. தனது பள்ளி,  கல்லூரி படிப்பை புது தில்லி மற்றும்  கோல்கத்தா  - இந்திய புள்ள...